திங்கள், 8 டிசம்பர், 2008

எங்கும் மனித நேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து


சென்னை, டிச.9-
`மனித நேயம் எங்கும் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்' என்று பக்ரீத் பண்டிகைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள், இஸ்லாமிய மக்களால் இன்று (9-ந் தேதி) எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாடும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட எனது இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியவர் இடர்தீர வழங்கி மகிழ்வதை "ஈத்துவக்கும் இன்பம்'' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமிய பெருமக்களுக்கு வழிகாட்டுவது இந்த பக்ரீத் பெருநாள்.

நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், `இஸ்லாமில் சிறந்தது எது?' என்று கேட்டார். அதற்கு அவர், `ஏழைகளுக்கு உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சலாம் கூறுதல்' என்றார். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும்.
சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும், மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத்தூய்மையையும் நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.

இந்த நெறி தழைக்க, எங்கும் மனித நேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லாரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி சமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: