புதன், 14 ஜனவரி, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி!.




புதுடில்லி :

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரிக்கும் "பயங்கர மோசடி விசாரணைக்குழு' முடிவும், அறிக்கையும் அடுத்த மூன்று மாதங்களில் வெளிவரும். குறிப்பாக, சத்யத்தின் ஆடிட்டர் நிறுவனமான "பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் மீதும் இவ்விசாரணை இருக்கும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மத்திய கம்பெனி விவகாரத்துறை விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே சத்யம் கம்ப்யூட் டர்சையும், அதன் துணை நிறுவனங்கள் எட்டையும் விசாரித்து, சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

சத்யத்தில் வேலைபார்க்கும் 53 ஆயிரம் ஊழியர் மற்றும் கம்பெனி சந்திக்கும் நிதி நெருக்கடி ஆகியவை பற்றியும் அதில் இடைஞ்சல் இல்லாத அணுகுமுறை ஏற்படுத்துவது பற்றியும் பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்ததாகத் தெரிகிறது.

அதே சமயம், சத்யம் நிர்வாகத்தை தற்போது மேற்கொண்டிருக்கும் தீபக் பரேக் மற்றும் மூவர் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில், அரசு உதவி அமையும் என்று அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்த சத்யம் ஆடிட்டிங் கம்பெனியான, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சி.பி.சிஐ.டி., சோதனை நடந்தது. அதில் ஆடிட்டர்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து தகவல்களைத் தந்தனர் என்று கூறப்பட்டது.

ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா, "சத்யம் தொடர்புள்ள மாயதாஸ் என்ற கட்டுமான நிறுவனக் கம்பெனிக்கு ஆந்திர அரசு அளித்த கான்ட்ராக்ட்களில் ஏதும் முறைகேடு இல்லை என்றார். இது தொடர்பாக அரசிடம் உள்ள ஆவணங்களை தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

தவிரவும், இந்திய சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் அமைப்பு சார்பில் துணைத் தலைவர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு சத்யம் கம்பெனி தணிக்கை நடைமுறைகளை முழுவதும் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராமலிங்க ராஜூவால் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, பின் மூவர் குழு நிர்வாகம் வந்த பின் பதவி பறிக்கப்பட்ட ராம் மைனாபதியிடம் விசாரணை முழுவீச்சில் நடந்தது என்று கூறப்படுகிறது.

மேலும், சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் ஆனது. இந்த மனுவைத் தாக்கல் செய்த சர்மா என்ற வக்கீல், அவசரமாக இம்மனுவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.

மெகா மோசடி நடந்த சத்யம் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை இன்போசிஸ் வரவேற்றிருக்கிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தருவது பற்றி கவலை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இன்போசிஸ் தலைமை நிதி நிர்வாகி வி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சத்யம் போன்ற மெகா மோசடி விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சரியானதே. ஆனால், சத்யத்துடன் மோசடி முடிந்த கதை அல்ல; மோசடிகள் தொடரும். அதேசமயம், ஒழுங்குமுறை அமைப்புகள் இவைகளைக் கண்டறிந்து எடுக்கும் நடவடிக்கைகள் மற்ற மோசடிகளைத் தடுக்க வேண்டும். சத்யம் விஷயத்தில் அதில் பணியாற்றும் 53 ஆயிரம் பணியாளர்களைக் காக்கும் அரசு முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த சம்பவத்தினால், இனி நம்பிக்கையான, பாதுகாப்பான ஐ.டி., நிறுவனங்களை மக்கள் நாடுவர். இனி எல்லாக் கம்பெனிகளும், தங்களைப்பற்றி அதிக தகவல்களைச் சொல்ல வேண்டிய காலம் வந்திருக்கிறது.
இவ்வாறு வி.பாலகிருஷ்ணன் கூறினார்.

"பாக்., அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை!.

வாஷிங்டன் :

"பாக்., அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அமெரிக்க செனட் உறுப்பினர் பெர்மன் வலியுறுத்தியுள்ளார்.


பாகிஸ்தானின் பிரபல அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான். அணுசக்தி தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களையும், தொழில் நுட்பங் களையும் ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, இவர் கைது செய் யப்பட்டார். தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், ஏ.கியூ.கான் நெட்ஒர்க்கின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது. இதுபற்றி அமெரிக்க செனட்டரும், வெளியுறவு கமிட்டியின் தலைவருமான பெர்மன் கூறியதாவது:

அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும், வரவேற்கத் தக்கது. ஆனால், இது போதுமானதல்ல. அணு ஆயுதம் தொடர்பான ரகசிய வர்த்தகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த விவகாரத்தில் ஈரான், வட கொரியா நாடுகளுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கியூ.கானுடன் தொடர்புடையவர்கள், அணுசக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க, புதிதாக பொறுப்பேற்க உள்ள ஒபாமா தலைமையிலான அரசு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பெர்மன் கூறியுள்ளார்.

வியாழன், 1 ஜனவரி, 2009

"மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு!.



இஸ்லாமாபாத், ஜன.1-

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜாகியுர் ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.



மும்பையில் கடந்த நவம்பர் 26-ந் தேதி அன்று தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தில் மூளையாக செயல்பட்டவன், ஜாகியுர் ரகுமான் லக்வி. தாஜ் ஓட்டல் மற்றும் நரிமன் ஹவுசில் இருந்தபடி 60 மணி நேரத்துக்கும் மேலாக தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை போட்டபோது, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலமாக ரகுமான் லக்வி வழங்கினான்.

தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல்களை போலீசார் பதிவு செய்து சோதனை செய்தபோது இந்த தகவல் கிடைத்தது. இது குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா புகார் செய்தது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமும் இந்த ஆதாரங்களை தெரிவித்தது. இதையடுத்து, `லஷ்கர்-இ-தொய்பா' இயக்கத்தின் தளபதியான ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபரா பாத்தில் கடந்த 7-ந் தேதி அன்று அவனும் அவனுடைய கூட்டாளிகள் 20 பேரும் கைதாகினர். இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் பதிவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஒலிப்பதிவு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, 60 மணி நேர சண்டை நடந்த சமயத்தில் தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டு இருந்தது ரகுமான் லக்வி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. செல்போனில் இருப்பது தீவிரவாதி ரகுமான் லக்வி குரல் என்பதை கண்டு பிடித்தனர்.



இதையடுத்து அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர். இது தொடர்பான செய்தியை இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் `டான்' செய்தித்தாள் வெளியிட்டு இருக்கிறது.

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட முகமது அஜ்மல் மற்றும் தீவிரவாதி ரகுமான் லக்வி இருவரும் பாகிஸ்தானில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. லக்வி தவிர யூசுப் முஜம்மில் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிக்கும் மும்பை தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளதை இந்தியா கண்டு பிடித்துள்ளது.


இதற்கிடையே, செல்போனில் பதிவாகி இருப்பது லக்வி குரல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அதிகாரிகளின் நெருக்கடிக்கு பயந்து தீவிரவாதி முகமது அஜ்மல் வாக்குமூலம் அளித்து இருப்பான் என்பதால் அதையும் பாகிஸ்தான் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளாது' என்றும் கூறி இருக்கின்றனர்.

தீவிரவாதியை ஒப்படைப்பது மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளின் கருத்துகளுக்கும் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் கருத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேற்றுமை உள்ளது.