திங்கள், 24 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி மாணவர்கள் 26 பேர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு


சென்னை, நவ.25-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 மாணவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த கே.சித்திரைசெல்வன் உள்பட 26 மாணவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி பாரதி கண்ணனும், அவரது ஆதரவு மாணவர்களும் சுவரொட்டி ஒட்டினார்கள் என்றும், அந்த சுவரொட்டியில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி என்று குறிப்பிடாமல், அரசு சட்டக்கல்லூரி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதன் தொடர்பாக மாணவர்களிடையே விரோதம் ஏற்பட்டது என்றும், இதனால் 12-ந் தேதி தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்களை பலர் தாக்கினார்கள் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வன்முறைக்கு காரணம் அன்றையதினம் பாரதி கண்ணன் கத்தியை எடுத்துக்கொண்டு, சித்திரை செல்வனை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தான் வன்முறை சம்பவம் நடந்தது.
மாணவர்களிடையே முன்விரோதம் உள்ளது என்று தெரிந்தும், முன்னதாகவே கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இதன் காரணமாகத்தான் வன்முறை சம்பவம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாங்கள் ஜெயிலில் இருந்து வருகிறோம். இந்த நிலையில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிஷன் முன்பு உண்மை விவரத்தை எடுத்துக்கூற வேண்டியுள்ளது. தற்போது நாங்கள் ஜெயிலில் இருந்து வருவதால், இந்த கமிஷன் முன்பு உண்மை விவரத்தை எடுத்துக்கூறும் வாய்ப்பு எங்களுக்கு பறிபோய்விடும். ஆகவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாரதி கண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பாக தங்களை போலீசார் கைது செய்தால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: