புதன், 12 நவம்பர், 2008

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்

சென்னை, நவ.13-
இலங்கையில் சிங்கள் ராணுவத்தின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் அப்பாவி தமிழர்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த கண்டனம்
சிங்கள ராணுவம் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்துள்ளபோதிலும், போரை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசு அடாவடியாக கூறி வருகிறது.
சட்டசபையில் தீர்மானம்
இந்தநிலையில் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஒரு அரசினர் தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இந்த உதவிகள் போதுமானதல்ல
``ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை; பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவுக்கு வராமல், அந்த மண்ணின் மைந்தர்களாம் தமிழின மக்களின் உயிர், உடைமைகள் எதற்கும் உத்திரவாதமில்லாமல்; அவர்களின் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாக அயல்நாடுகளுக்கு ஓடியவர்கள் போக எஞ்சியிருப்போர், எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துத் துடித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலை குறித்து முடிவெடுக்க அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திற்கிணங்க; கடலில் எல்லை வகுக்கப்பட்டு ஓர் உடன்பாட்டின் மூலம் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டாலும் நமது பக்கத்து நாட்டிலேயே நமது உடன்பிறந்த தமிழ் மக்கள், நித்த நித்தம் சிந்தும் ரத்தமும் வடிக்கும் கண்ணீரும் நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சிகளாகி விட்ட கொடுமைக்கிடையே; இந்தியப் பேரரசின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்கான உணவு, உடை, மருந்து போன்ற அத்யாவசியப் பொருள்களை, தமிழகத்திலிருந்து, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் வாயிலாக அனுப்பி வைக்கிறோம் எனினும்; அவர்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல.
சமநிலை வாழ்வு
அவர்களின் உயிர், உடைமை, ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு, இலங்கையில் அமைய வேண்டிய அமைதி நிறைந்த சமநிலை வாழ்வு, இவை அங்குள்ள தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தமான நடவடிக்கையை நமது இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலை உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும், கலாசாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒன்றாக உள்ள ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாகத் தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும், அரசியல் சார்பற்ற அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி, இலங்கை அரசுக்குத் தங்களது எதிர்பைத் தெரிவித்து வருகின்றன.
போரை நிறுத்த வேண்டும்
மாணவர்கள், வணிகர்கள், திரைப்படக் கலைஞர்கள், திரைப்படத் தொழில் ட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தொழிலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என எல்லாத் தரப்பினரும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து சென்னையில்; வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய மாபெரும் நிகழ்ச்சி மறக்கவொண்ணாதது.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீங்க வேண்டுமானால் அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும். போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்துகிறது.
மத்திய அரசை வலியுறுத்தி
இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''
இவ்வாறு தீர்மானத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்மொழிந்து வாசித்தார்.
ஒருமனதாக நிறைவேறியது
இந்த தீர்மானத்தை ஆதரித்து ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), மு.கண்ணப்பன் (ம.தி.மு.க.), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்டு), பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு), ஜி.கே.மணி (பா.ம.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள். நிறைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
பின்னர் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: